தொழிலதிபர் போல் ஏமாற்றி டிவி, ஏசி போன்ற பொருட்களை வாங்கி அதை ஆன்லைனில் விற்று பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை அனிஷாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அனிஷா என்கிற பூர்ணிமா தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவர் சக்தி முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த அனிஷா, நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வந்தார்.
கேகே நகரை சேர்ந்த ஏசி டீலரான பிரசாந்தை சந்தித்த சக்தி முருகன், கிண்டியில் புதிதாக திறக்கவுள்ள தன்னுடைய ஹோட்டலுக்கு 103 ஏசி தேவை என கூறியுள்ளார்.
அதற்காக 37 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் சக்தி முருகன் பிரசாந்திடம் கொடுத்துள்ளார்.
சொகுசு காரில் வந்து இறங்கிய சக்தி முருகனை தொழிலதிபர் என நம்பி அவர் கேட்ட 37 லட்சம் மதிப்பிலான ஏசி்யை கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்துள்ளார்.
ஆனால் வங்கிக்கணக்கில் போதுமான பணம் இல்லாததால், காசோலை திரும்பியுள்ளது. இதுகுறித்து சக்தி முருகனிடம் கேட்டதற்கு பணம் தருவதாக காலதாமதம் செய்திருக்கிறார்.
மேலும் தன்னிடம் வாங்கிய ஏசிகளை இணையதளம் மூலம் விற்றதை கண்டுபிடித்த பிரசாந்த், இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸ்கை டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சக்தி முருகனை நம்பி ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை சிலர் வாடகைக்கு கொடுத்துள்ளனர். இந்த கார்களையும் சக்தி முருகன் விற்றுள்ளார்.
வாடகைக்கு எடுத்த காரை அதிகபட்சமாக 64 லட்ச ரூபாய் வரை விற்றுள்ளார். கார் மோசடி குறித்து எம்.ஜி. ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, சக்தி முருகன் தலைமறைவானார்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். சக்திமுருகனின் கூட்டாளியான ரமேஷை எம்.ஜி.ஆர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடிகளில் தொடர்புடைய சக்தி முருகனின் மனைவி அனிஷாவையும், அவரது சகோதரர் ஹரிகுமாரையும் கே.கே நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.